திருச்சபையானது மார்ச் 25 இல் ஆம் தேதி அன்று, கன்னிமரியாள் மங்கள வாக்கு திருநாளை (The Solemnity of the Annunciation of Virgin Mary) ஆசரிக்கிறது.
கிறிஸ்து பிறந்த விழாவை டிசம்பர் மாதம் 25ஆம் நாம் கொண்டாடுகிறோம். அதற்கு சரியாக ஒன்பது மாதங்களுக்கு முன்னர், காபிரியேல் தூதர் அன்னை மரியாவுக்கு *அருள் நிறைந்த மரியே வாழ்க!* என்று ஆசி கூறி, உமக்கு ஒரு மகன் பிறப்பான் என இயேசுவின் பிறப்பை முன்னறிவித்த வரலாற்று நிகழ்வை மங்கள வார்த்தை திருவிழாவாக ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்பு பெரு விழாவாக கொண்டாடுகின்றது
தவக்காலத்தில் கொண்டாடும் மிக பெரிய திருவிழா என்பது இறைமகன் இயேசுவைப் பெற்றெடுத்த அன்னை மரியாளுக்கு கபிரியேல் தூதர் வாழ்த்துக் கூறிய பெருவிழாவும் இறைமகன் இயேசுவை வளர்த்தெடுத்த சூசை தந்தைக்கு வணக்கம் செலுத்தும் திருவிழாவும் தான் என்றால் அதில் மாற்றுக்கருத்து இருப்பதற்கு வாய்ப்பு இல்லை தான்.
இறைத்தூதர் மரியாவிடம் சென்று, அவர் கருவுற்று ஒரு மகனைப் பெறுவார் என அறிவிக்கிறார் (லூக் 1:26-33). திருமண ஒப்பந்தம் ஆகியிருந்தும் கணவரோடு கூடி வாழாதிருந்த மரியா, ''இது எப்படி நிகழும்?'' என்று கேட்ட கேள்விக்கு வானதூதர் அளித்த பதில்: ''கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' (லூக் 1:37) என்பதாகும்.
ஆகட்டும் என்ற பணிவால் அன்னை மரியாள் இறை திட்டத்திற்கு பணிந்தவராய், என் நிலை வந்தாலும் நான் உனக்கு அடிமை என்று பணிந்து நிற்கிறார். ‘இதோ ஆண்டவரின் அடிமை, உமது சொற்படி நிகழட்டும்” என்று கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேற தன்னையே இறைவனின் கரங்களில் கையளிக்கிறார்.இறை திட்டத்திற்கு ஆகட்டும் என்று அடிபணிகின்ற மரியாளின் பெருந்தன்மை நம்மிடமும் மேலோங்கி நிற்கும் போதெல்லாம் நாமும் பிறரன்பு பணிகளில் சிறந்து இருப்போம். இறைத் திட்டம் நிறைவேற அன்னை மரியாவைப் போன்று, ஆண்டவர் இயேசுவைப் போன்று இறைவனின் கரங்களில் நம்மையே நாம் ஒப்புக்கொடுப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.
0 Comments