Ad Code

இஸ்ரவேலின் ஆறுதல் • Consolation of the Israel • SMC Lenten Meditation 2024

SMC Lenten Meditation 2024
தியானம்: 12 / 40 - இஸ்ரவேலின் ஆறுதல்
எழுதியவர்: திரு. டெ. ஹேரிஸ் 

தலைப்பு: இஸ்ரவேலின் ஆறுதல்
லூக்கா 2:25 அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான், அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான், அவன் மேல் பரிசுத்தஆவி இருந்தார். 

வசன இருப்பிடங்கள்:
லூக்கா 2.25

தலைப்பின் அர்த்தம்:
யூதர்கள் மேசியாவின் வருகை இஸ்ரவேலுக்கு ஆறுதல் தரும் என்று நம்பினர். மேசியாவே இஸ்ரவேலின் ஆறுதல் ஆக எதிர்ப்பார்க்கப்பட்டார். அந்நாட்களில் யூதர்கள் காத்திருந்த மேசியாவிற்கு வழங்கப்பட்ட மற்றொரு பெயர்.

விளக்கவுரை:
லூக்கா:2:25 இல் குறிப்பிட்டபடி சிமியோனும் அவருக்கு முந்தைய தலைமுறைகளும் கடவுளுடைய மக்களுக்கு ஆறுதல் சொல்லும் ஒருவரின் வருகைக்காகக் காத்திருந்தனர். அந்த ஒருவரே மேசியா. வரவிருக்கும் மேசியாவையும், அவர் இஸ்ரவேலுக்கு தரவிருக்கும் ஆறுதலையும் குறித்து உரைக்கப்பட்ட தீர்க்கதரிசன வசனங்கள்: ஏசாயா:12:1; ஏசாயா:40:2; ஏசாயா:49:13; ஏசாயா:61:2

இஸ்ரவேலர் எதிர்பார்த்த ஆறுதல்:
பழைய ஏற்பாட்டில் மக்கள் அடிமைத்தனம், நாடுகடத்தல் மற்றும் கடவுளின் நியாயதீர்ப்பு என்பதோடு அனைத்து குற்ற உணர்வுகளுடனும் பயத்துடனும், தனிமை மற்றும் மரணத்தை அனுபவித்தனர். அவர்களின் வரலாறு முழுவதும், இஸ்ரவேல் மக்கள் தங்கள் சொந்த பாவங்களுக்காகவும் மற்றவர்களின் அடக்குமுறையின் காரணமாகவும் பெரிதும் துன்பப்பட்டனர். அவர்களின் நிலம் அடிக்கடி கைப்பற்றப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால், அவர்கள் மீட்பும் ஆறுதலும் மிகவும் தேவைப்படும் ஒரு மக்களாக இருந்தார்கள். இஸ்ரவேலின் ஆறுதலான மேசியா தங்களுக்கு அரசியல் மற்றும் தேசிய சுதந்திரத்தைக் கொண்டு வருவார் என்று இஸ்ரேலில் பலர் நினைத்தார்கள்.

இஸ்ரவேலின் மெய்யான ஆறுதல்: 
ஆனால் இயேசு கொண்டு வந்த ஆறுதல் அவர் வழங்கிய எந்த அரசியல் சுதந்திரத்தையும் விட சிறந்தது: அவர் அவர்களுக்கு மீட்பையும் பாவ மன்னிப்பையும் கொடுத்தார். இஸ்ரவேலின் ஆறுதலான மேசியா, துக்கத்தை நீக்கி, தேசத்திற்கு ஆறுதல் அளிப்பவராக இருந்தார். இஸ்ரவேலின் ஆறுதலாகிய இயேசு கிறிஸ்து தன்னையே தந்து இஸ்ரவேலின் பாவ பாரத்தை சுமந்து தீர்த்து அவர்களுக்கு நிரந்தர ஆறுதலை கொடுத்தார். ஏசாயா தீர்க்கதரிசனமாக மேசியா ஆறுதல் ஊழியத்தை மேற்கொள்வார் என்று - "துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும்" (ஏசாயா 61:1-2). ஏசாயா முன்னறிவித்தார்.

ஆமோஸ்:9:11-15 இல் எழுதியிருக்கிற கர்த்தரின் வார்த்தையின்படியே, அவர் தரும் ஆறுதல் விளங்கும். நன்மைகளை திருப்பும் ஆறுதலாக விளங்கும். பாவம், வெறுப்பு, கோபம், குற்ற உணர்வு, அவமானம், சந்தேகம், தோல்வி அனைத்தையும் நாம் திரும்பிப் பார்க்கும்போது இயேசு கிறிஸ்து கடவுளின் ஆறுதல். நம்முடைய பலவீனத்தில் நம் பரலோகத் தகப்பன் கனிவான பாசம் வைத்திருக்கிறார் என்பது ஆறுதல். கடவுளின் கோபம் கடந்துவிட்டது என்ற ஆறுதல். நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு, "கடலின் ஆழத்தில் தள்ளப்பட்டது" (மீகா 7:19) என்ற ஆறுதல் – இதுதான் "இஸ்ரவேலின் ஆறுதல்". 

எல்லோருக்குமான ஆறுதல்:
இயேசு என்னும் மேசியா உண்மையிலேயே இஸ்ரவேலின் ஆறுதலாகவும், விசுவாசிக்கிற அனைவருக்கும் ஆறுதலாகவும் இருக்கிறார் என்று அவரை நம்புகிற அனைவருக்கும் தெரியும். நான் இஸ்ரேலின் ஒரு பகுதி அல்ல, எனவே இந்த ஆறுதல் எனக்காக என்று நினைக்க வேண்டியது இல்லை. நம்பிக்கையற்ற புறஜாதிகள் இந்த ஆறுதலிலிருந்து விடுபடாதபடி கர்த்தர் உறுதி செய்தார். கடவுளின் ஆறுதலாகிய இயேசு கிறிஸ்துவின் ஒளி இஸ்ரவேல் மக்களுக்கு மட்டுமல்ல, புறஜாதிகளுக்கும் பிரகாசிக்கிறது. கடவுளின் ஆறுதல் ஒரு ஆசீர்வாதம், அதைப் பெறும் கிருபை அனைவருக்கும் இப்போது கிடைக்கிறது. இயேசு கிறிஸ்து யூதர் மற்றும் புறஜாதிகளுக்கு ஆறுதல். கிறிஸ்து, உலகிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் ஆறுதல்.

முடிவுரை:
ஏசாயா 49:13 சொல்லுகிறது: “வானங்களே, கெம்பீரித்துப் பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்.” இந்த உலகம் தர இயலாத ஒரு ஆறுதல், கிறிஸ்துவிடமிருந்து மட்டுமே வரக்கூடிய ஆறுதல். மேலும் உங்கள் இதயத்தில் ஏதேனும் ஆழமான ஏக்கம் இருந்தால், கடவுள் அவருடைய ஆறுதலை நீங்கள் அடையாளம் கண்டு பெற உங்களை தயார்படுத்துகிறார். அவரைத் தவிர வேறு எங்கும் அதைத் தேடாதீர்கள்.

இவ்வுலகில் ஆறுதல் என்பது வாழ்க்கையின் கடந்தகால இழப்புகள் மற்றும் துயரங்களிலிருந்து குணமடைவதற்கும் நம்மை மீட்டெடுப்பதற்கும் உதவுகிறதாய் இருக்கிறது. தூக்கி எறியப்பட்ட அல்லது இழந்த அனைத்தையும் குணப்படுத்தவும் மீட்டெடுக்கவும் புதுப்பிக்கவும் கர்த்தரின் கரம் நம்மேல் வரும்போது நாம் ஆறுதல் பெறுகிறோம். ஆமென்.

Post a Comment

0 Comments