(மாற்கு 5:1–20 | பில்லி கிரஹாம் அவர்களின் "உடைந்த காரியங்களுக்கான நம்பிக்கை" என்ற செய்தியால் ஈர்க்கப்பட்டது)
கெனசேனரின் நாட்டில் பிசாசு பிடித்த மனிதனின் வரலாற்றிலிருந்து பில்லி கிரஹாம் ஒரு ஆச்சரியமான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார்.
இந்தப் பகுதியில், இயேசுவிடம் மூன்று வெவ்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்ன. அதில் இரண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன, ஒன்று நிராகரிக்கப்பட்டது.
1️⃣ பிசாசுகள் செய்த ஜெபம்:
"எங்களை அந்தப் பன்றிகளுக்குள்ளே அனுப்பும்படி வேண்டிக்கொண்டன." (மாற்கு 5:12)
இயேசு அதற்கு உத்தரவளித்தார்.
இந்தக் கோரிக்கையை அவர் ஏன் ஏற்றுக்கொண்டார்?
அவர் பிசாசுகளையோ அல்லது அவற்றின் விருப்பத்தையோ அங்கீகரித்தார் என்பதற்காக அல்ல; மாறாக, பொல்லாத ஆவிகளும் அவருடைய முழு அதிகாரத்திற்கு உட்பட்டவை என்பதைக் காட்டவே அப்படிச் செய்தார். பன்றிகள் அழிந்தது சாத்தானின் அழிவுண்டாக்கும் குணத்தை வெளிப்படுத்தியது, ஏனெனில் சாத்தானின் நோக்கம் "திருடவும் கொல்லவும் அழிக்கவுமே" ஆகும் (யோவான் 10:10). இயேசு அந்த சூழ்நிலையின் மீது முழு இறைமையுள்ளவராகவே இருந்தார்.
2️⃣ அந்தப் பகுதி மக்கள் செய்த ஜெபம்:
"தங்கள் எல்லைகளை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள்." (மாற்கு 5:17)
இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் போனார்.
இந்தக் கோரிக்கையை அவர் ஏன் ஏற்றுக்கொண்டார்?
அந்த மக்கள் இரட்சகரின் பிரசன்னத்தை விடத் தங்களது பன்றிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். அவர்கள் பயந்து, அவரை நிராகரித்தார்கள். தம்மை நிராகரிப்பவர்கள் மீது இயேசு தம்மை வலுக்கட்டாயமாகத் திணிப்பதில்லை. மனிதர்கள் எடுக்கும் முடிவுகள் மோசமான ஆவிக்குரிய விளைவுகளைத் தந்தாலும், அவர்கள் தங்களின் சொந்த முடிவை எடுக்க தேவன் அனுமதிக்கிறார்.
3️⃣ விடுதலையாக்கப்பட்ட மனிதன் செய்த ஜெபம்:
"பிசாசு பிடித்திருந்தவன் அவரோடேகூட இருக்கும்படி அவரிடத்தில் வேண்டிக்கொண்டான்." (மாற்கு 5:18)
இயேசு அதற்கு அனுமதிக்கவில்லை (இல்லை என்றார்).
அதற்குப் பதிலாக, இயேசு அவனிடம்:
«"நீ உன் வீட்டிற்கு உன் இனத்தாரிடத்திற்குப் போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்த காரியங்களையெல்லாம் அவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றார்." (மாற்கு 5:19)»
இயேசு இந்த ஜெபத்தை ஏன் நிராகரித்தார்?
ஏனெனில், அவரிடம் ஒரு மேன்மையான நோக்கம் இருந்தது. அந்த மனிதன் இயேசுவோடு இருக்கும் மகிழ்ச்சியை மட்டுமே விரும்பினான்; ஆனால் இயேசுவோ அவனுக்குத் தொண்டு செய்யும் பாக்கியத்தைக் கொடுத்தார். தெக்கப்பொலி பகுதி முழுவதும் அவன் கொடுத்த சாட்சி எண்ணற்ற மக்களைச் சென்றடைந்தது. சில நேரங்களில் தேவனுடைய "இல்லை" என்ற பதில் நிராகரிப்பு அல்ல—அது அவருடைய பூரண திட்டத்திற்கான ஒரு வழிநடத்துதல்.
நாம் கற்றுக்கொள்ளும் பாடம்
1. கடவுள் சில நேரங்களில் "சரி" என்கிறார்.
2. மக்கள் தம்மை நிராகரித்தாலும், சில நேரங்களில் அவர்களின் சொந்தத் தேர்வை கடவுள் அனுமதிக்கிறார்.
3. கடவுள் தாம் நேசிப்பவர்களின் ஜெபங்களுக்குச் சில நேரங்களில் "இல்லை" என்கிறார், ஏனெனில் அவர்களிடம் ஒப்படைக்க அவரிடம் ஒரு மேன்மையான நோக்கம் இருக்கிறது.
இந்த வரலாற்றில் இயேசு நிராகரித்த ஒரே ஜெபம், அவர் குணமாக்கிய மனிதனின் ஜெபம் மட்டுமே. ஆனால் அந்த "இல்லை" என்ற பதிலே ஒரு வல்லமையான ஊழியத்தின் தொடக்கமாக மாறியது.
கடவுள் "இல்லை" என்று சொல்லும்போது, அவருடைய ஞானத்தை நம்புங்கள். நமது விருப்பத்தை விட அவருடைய நோக்கமே எப்போதும் மேலானது.

1 Comments
Praise the lord 🙏
ReplyDelete