Ad Code

பேராயர் அசரியா ஒழிக்க நினைத்த சபை கார்ப்பரேட் நிறுவனம் இன்னும் தொடர்கிறதா? Does the corporate-style church system that Bishop Azariah sought to abolish still persist today?

"பரலோகத்தில் பொன் ஆசனங்களிலிருக்கும் உரிமையைப் பெற்றுக்கொள்ள இந்தியராகிய எங்களை அழைக்கும் மேல்நாட்டு மிஷனரிமார், நாங்கள் கிறிஸ்து மார்க்கத்தை தழுவிய பின், அவர்கள் வீட்டுத் தாழ்வாரத்திலிருக்கும் பிரம்பு நாற்காலிகளிலும் கூட உட்கார எங்களைக் கேட்கிறதில்லை."
— பேராயர் அசரியா

முதல் இந்தியப் பேராயர் வே. சா. அசரியா 1910-இல் எடின்பர்க் உலக மிஷனரி மாநாட்டில் எழுப்பிய அந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கேள்வி, வெறும் ஆங்கிலேய ஆட்சிக்கால மிஷனரிகளுக்கு எதிரான கண்டனம் மட்டுமல்ல; அது அன்றைய சபைகளில் நிலவிய ஆசாரிய அதிகாரத்துவத்தின் மீது வீசப்பட்ட சத்தியத்தின் ஒளி.

அந்த ஆங்கிலேய ஆதிக்க மனப்பான்மை, இன்றைக்கும் இந்தியத் திருச்சபைகளின் நிர்வாக அமைப்புகளிலும், ஊழியர்களுக்கிடையேயான உறவுகளிலும் உருமாறித் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பேராயர் அசரியா சுட்டிக்காட்டிய அந்த "பிரம்பு நாற்காலி" குறியீடு, இன்று குருவானவரின் அலுவலக அறைகளில் (Parish Office) வேறு வடிவத்தில் உறைந்து கிடக்கிறது.
 
1. சமமரியாதை மறுக்கப்படுதல்:
ஒரு திருச்சபையின் குருவானவர் அல்லது தலைமைப் போதகர் அமர்ந்திருக்கும் அறைக்கு, அதே சபையின் களப்பணி சபை ஊழியரோ (Catechist/Church Worker), சுவிசேஷகரோ அல்லது இளம் உதவிப் போதகரோ வரும்போது, அவர்களை அமரச் சொல்லும் அடிப்படை நாகரிகம்கூடப் பல இடங்களில் மறுக்கப்படுகிறது.

2. கார்ப்பரேட் அதிகாரக் கலாச்சாரம்: 
கிறிஸ்துவின் தாழ்மை மற்றும் சீஷத்துவக் கோட்பாட்டிற்கு மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்களைப் போன்ற "மேல்-கீழ்" (Hierarchy) அதிகாரக் கலாச்சாரம் சபைகளில் மேலோங்கியுள்ளது. மூத்த ஊழியர்கள் தங்களை மேலதிகாரிகளாகவும் (Corporate Bosses), இளம் ஊழியர்களைத் தங்களின் கீழ் இயங்கும் ஊழியர்களாகவும் (Subordinates) பார்க்கும் போக்கு அதிகரித்துள்ளது.
 
3. விருந்திலும் நிலவும் பாகுபாடு: 
திருச்சபை மாநாடுகள் மற்றும் பண்டிகைகளின் போது, குருவானவர்களுக்கும் மேல்மட்ட நிர்வாகிகளுக்கும் தனியாகக் குளிரூட்டப்பட்ட அறைகளில் சிறப்பு விருந்தும், எளிய சபை ஊழியர்களுக்கும் தொண்டர்களுக்கும் பொது இடத்தில் சாதாரண உணவும் பரிமாறப்படும் பிரிவினைவாதப் போக்கு இன்றும் வழக்கத்தில் உள்ளது.
 
4. பட்டமும் ஏகவசன ஆதிக்கமும்: 
வயதிலோ அனுபவத்திலோ மூத்தவராக இருந்தாலும், குரு பட்டம் பெறாத சபை ஊழியரை ஏகவசனத்தில் அழைப்பதும்; அதேவேளை, பட்டம் பெற்ற குருவானவர் வயதில் சிறியவராக இருந்தாலும் அவரை 'ஐயா' என்றும் பாஸ்டர்' என்றும் அழைக்கச் சொல்லும் ஆசாரிய மேலாதிக்கம் நிலவுகிறது.
 
5. உழைப்பு ஒருவருடையது; புகழ் மற்றொருவருடையது: 
சபை விசுவாசிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று ஜெபிப்பது, நள்ளிரவு மருத்துவ அவசரங்களுக்கு ஓடுவது, இளைஞர் ஊழியங்களை நடத்துவது போன்ற கடினமான களப்பணிகளை (Fieldwork) இளம் ஊழியர்களே செய்கிறார்கள். ஆனால், ஆண்டறிக்கையிலும் மேடைகளிலும் அந்தப் புகழும் நற்பெயரும் மூத்த ஊழியர்களுக்கே போய்ச்சேர்கின்றன.
 
6. பொருளாதாரப் பாகுபாடு
மூத்த ஊழியர்களின் ஊழியச் செலவுகள் மற்றும் குடும்ப மருத்துவ அவசரங்களுக்குத் திருச்சபையின் நிதி (Allowance, Medical Expenses, Pension, etc.) முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. அதேநேரம், ஓர் இளம் ஊழியரின் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடியோ, நோய்மையோ ஏற்பட்டால், "ஜெபம் செய்யுங்கள், கர்த்தர் பார்த்துக்கொள்வார்" என்று சொல்லி கடந்துபோகும் அலட்சியப் போக்கே நிலவுகிறது..அடிமட்டச் சபை ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச வாழ்வாதார ஊதியத்தைக் கூட உயர்த்த மறுக்கும் நிர்வாகநிலை இன்றும் உள்ளது.

7. அங்கீகாரமின்மை: 
எந்தவித குருத்துவக் குடும்பப் பின்னணியோ, நிதிப் பலமோ, அரசியல் செல்வாக்கோ இல்லாமல் கிராமப்புறங்களிலும் எளிய மக்களிடையேயும் உண்மையாய் உழைக்கும் ஊழியர்களுக்குத் தகுந்த அங்கீகாரமோ, பதவி உயர்வுகளோ மறுக்கப்பட்டு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் அதே நிலையில் முடக்கப்படுகிறார்கள்.

நிறைவாக...
இயேசு கிறிஸ்து தம் சீஷர்களின் கால்களைக் கழுவி, "உங்களில் பெரியவனாக இருக்க விரும்புகிறவன் எல்லாரிலும் சிறியவனாக இருக்கக்கடவன்" என்று கற்பித்த தாழ்மையின் மாதிரி, இன்றைக்குப் பதவி ஆடம்பரத்தின் கீழ் புதைக்கப்பட்டுவிட்டது. பரலோகப் பொன் ஆசனங்களை வாக்குறுதியாகக் கொடுப்பதற்கு முன், பூலோகத்தில் நம் சக ஊழியருக்குச் சமமான இருக்கையைக் கொடுத்து மதிப்பதே மெய்யான கிறிஸ்தவ அன்பு. இந்த அதிகார வர்க்கச் சுவர்களைத் தகர்ப்பதே பேராயர் அசரியாவின் குரலுக்கு நாம் செய்யும் உண்மையான நீதியாகும்.


Post a Comment

0 Comments