Ad Code

தூய திரித்துவ பேராலயம் • Holy Trinity Cathedral • Palayamkottai


பாளையங்கோட்டையின் அடையாளச் சின்னமாக உள்ள ஊசி கோபுரம் என அழைக்கப்படும் கோபுரம் கொண்ட தேவாலயம் தான் தூய திரித்துவ பேராலயம். 

பாளையில் ஒரு கோயில்

CMS மிசனரி ரேனியஸ் பாளையங்கோட்டையில் ஒரு பெரிய தேவாலயம் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஜெபித்து செயல்பட்டார். 03.01.1826 அன்று பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்திற்கு கால்கோள் நாட்டு விழா நடைபெற்றது. அதே ஆண்டில் ஜூன் மாதம் மூன்றாம் தேதி ஆறு மாதங்களுக்குள் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த தேவாலயத்திற்கு பெரிய கோயில், புது கோயில், வேத கோயில், ரேனிஸ் கட்டிய கோயில், ரோடு கோயில் என்று மக்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அழைத்து இயேசுவை வணங்கிச் சென்றனர்.

திரித்துவ ஆலயம் என பெயர் சூட்டல் 

கனம் ரேனியஸ் ஐயா நெல்லையில் விடைபெற்றதும் பேராயர் காரி 1830ம் ஆண்டில் முதல்முறையாக திருநெல்வேலிக்கு வந்தார். அப்போது பாளையங்கோட்டை பெரிய கோயிலில் தேவசகாயம் என்பவருக்கு கிறிஸ்துவப்பட்ட ஆராதனையின்போது இவ்வாலயத்திற்கு ‘பரிசுத்த திரித்துவ பேராலயம்’ என்று பெயர் சூட்டினார்.

ஊசி கோபுர பணி 

இந்த ஊசி கோபுரம் கட்டும் பணிகள் 1845ம் ஆண்டு தொடங்கியது. கோபுரத்துக்கு உறுதியான அடித்தளம் அமைய கோட்டை சுவர்களில் உள்ள கற்களை அதிகாரிகளின் அனுமதியோடு பெற்று பயன்படுத்தினார்கள். கோபுரத்தை மூன்று தளங்கள் உடையதாகவும் உச்சிப்பகுதி ஊசி போன்ற அமைப்புடையதாகவும் அமைத்தனர். கோபுரத்தின் உச்சியில் ஆறடி சுற்றளவு உள்ள இரும்பு உருண்டை பதிக்கப்பட்டது. அனைத்துப் பணிகளும் 1845ம் ஆண்டிலேயே நிறைவடைந்தன.

கோபுரம் ஆலயத்திற்கு அணியாகவும் நகருக்கு அலங்காரமாகவும் கிறிஸ்துவ பெருமானுக்கு நற்சாட்சியாகவும் விளங்கி வருகிறது. நெல்லை பகுதியில் இந்த கோபுரம்தான் மிக உயரம் உடையதாக திகழ்கிறது. நூற்றிபதினைந்து அடி உயரம் உடையது. இத்தகைய அமைப்புடைய கோபுரத்தை ஆங்கிலத்தில் ‘ஸ்டீபிள்’ என்று அழைப்பார்கள். தமிழில் ‘ஊசி கோபுரம்’ என்று அழைக்கின்றனர். 

ஊசி கோபுர மணி & கடிகாரம்

இறை வழிபாட்டிற்கு மக்களை அழைக்க மணி அடிக்கும் பழக்கம் அன்று இல்லை. பனந் தூறு ஒன்றில் துளையிட்டு அதன் மேல் பகுதியை ஆட்டுத் தோலால் போர்த்தி அதைத் தட்டுவதன் மூலம் ஓசை எழுப்புகிற முறையே அன்று இந்த ஆலயத்தில் கையாளப்பட்டது.

லண்டனை சார்ந்த ஜான் முரே சன்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டவை. அது கடந்த 1850ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி வந்து சேர்ந்தது. பின்னர் ஊசி கோபுரத்தில் ஏற்றப்பட்டது. இவ்வாலய மணி சமீப காலத்தில் இரு முறை பழுதடைந்து மீண்டும் வார்க்கப்பட்டது. எனினும் கோபுரத்தில் அமைக்கப்பட்ட கடிகாரம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருப்பது வியப்பான விஷயமாகும். 

பேராலயமாக உயர்த்தப்படல்

114 ஆண்டுகளுக்குப் பிறகு 1940ம் ஆண்டில் அந்நாளில் நெல்லை பேராயர் ஸ்தேவான் நீல் காலத்தில், ‘அத்தியட்சாலயம்’ (Cathedral - பேராலயம் ) என்ற சிறப்பும் பெற்றது. 

ஊசி கோபுர புதிய மணி

கடந்த 1998ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆங்கிலிக்கன் சபையின் சார்பில் புதிய பெரிய மணி வழங்கப்பட்டது. இதுவே தற்போது கோபுரத்தில் உள்ள மணியாகும்.

பேராலயம் புதுப்பிக்கப்படல் 

பேராயர் கிறிஸ்துதாஸ் அவர்கள் காலத்தில் பேராலயம் சற்று விரிவுபடுத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு, இப்போது புதிய பொலிவுடன் காட்சியளிக்கிறது. 

பாளையங்கோட்டையில் ஊசி கோபுரம் அடையாளத்துடன் தூய திரித்துவ பேராலயம் கம்பீரமாக நூற்றாண்டுகளைக் கடந்து காட்சியளித்து வருகிறது. இன்றளவும் கிறிஸ்துவ மக்களின் பிரார்த்தனைக்குரிய முக்கிய இடங்களில் ஒன்றாக திகழும் இந்த பேராலயம் கிறிஸ்து இயேசுவுக்கு மகிமை சேர்க்கிறது.

தொகுப்பு
மேயேகோ 
9486810915

Post a Comment

0 Comments