Ad Code

சீடர்களைக் உருவாக்குவோம் • Making the Disciples • CSI Diocese of Tirunelveli

தேதி: 29 ஜூன் 2025
பெந்.திரு.பின்வரும் 3ம் ஞாயிறு (திரித்துவ 2)

சீடர்களை உருவாக்குவோம்
வேதபகுதி : 1 இராஜாக்கள் 19:11&21 ரோமர் 16:3&16
லூக்கா 5:1-11 சங்கீதம் 34:11-22

திருவசனம் : "உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக;
 "இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்." லூக்கா 5:10 (பி)

 சீடர்களை உருவாக்குதல் என்பது, கிறிஸ்தவ வாழ்க்கையின் முக்கிய பணி மற்றும் தெய்வீக அழைப்பாகும். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரத்துக்கு ஏறுவதற்கு முன்பு நம் அனைவருக்கும் கொடுத்த சிறந்த கட்டளை, 'யாவரையும் சீஷராக்குங்கள்' என்பதே. இக்கட்டளை விசுவாசிகளாகிய நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய மிகச் சிறந்த கட்டளை ஆகும்.

சீடத்துவம் :
சீடத்துவம் (Discipleship) என்பது கிறிஸ்தவத்தின் ஒரு அடிப்படை, இயேசுவின் சீடத்துவம் ஒரு முழுமையான மாற்றத்தைப் பெறும் அனுபவமாகும். இது உள்ளத்தின் மாற்றம், வாழ்க்கையின் மாற்றம், சிந்தனையின் மாற்றமாகும். இது ஒருவனின் உள்ளத்தைப் புதியதாக மாற்றுகிறது. உண்மையான சீடத்துவம் என்பது இயேசுவின் வார்த்தையை முழுமையாக வாழ்ந்து காட்டுவதாகும்.
வசனத்தின் பின்னணி : லூக்கா 5-வது அதிகாரத்தில் கெனசரேத்து கடலின் பகுதியில் இயேசு கிறிஸ்து தம்மிடத்தில் கூடி வந்த ஜனங்களுக்கு இறை வார்த்தைகளைப் பிரசங்கம் பண்ணுகிறார். இந்த நிகழ்வு இயேசுவின் திருப்பணியில் மிக முக்கியமான தொடக்கம் ஆகும். இதன் மூலம், அவர் தனது சீடர்களை அழைத்து, சீடர்களை உருவாக்கும்படியான மாபெரும் திட்டத்தை பகிர்ந்து கொள்கிறார். சீடர்களை உருவாக்க வேண்டியது கிறிஸ்தவத்தின் இன்றியமையாத தன்மையாகும்.

1. உலகின் பாவப்பயத்தை நீக்கிட
(To remove the fear of sin from the world)
 Μή (மே), "பயப்படாதே" poßoū - (மே ஃபோபூ) என்றால் ஒரு நிராகரிப்பு என்பதின் அடையாளமாகும். அதாவது "இல்லை" அல்லது "பற்றாக்குறை" என்பதை குறிப்பிடுகிறது. φοβοu (ஃபோபூ) என்றால் "பயப்படுதல்" என்று பொருள்படும். இது "பயப்படாதே" என்பதற்கான அழைப்பாக வருகிறது. இங்கே இயேசு பேதுருவின் மனதில் உள்ள பயத்தை அறிந்துகொண்டு, அதை நீக்குவதற்கான வார்த்தையாக "பயப்படாதே" என்று கூறுகின்றார்.
 இது தெய்வீக அழைப்பில் தேவன் நம்மை எவ்வித பயத்தினாலும் கலங்க விடாமல் நம்மை உறுதியானவர்களாக மாற்றுகிறார் என்பதனைக் காட்டுகிறது. இயேசு கிறிஸ்து, பேதுரு தனது பாவ உணர்வின் காரணமாக ஏற்பட்ட பயத்தில் துடித்துக்கொண்டிருக்கும் போது, அவருக்கு முதலாவது ஆறுதல் அளிக்கிறார். இது கடவுளின் அருளின் வெளிப்பாடு. கிறிஸ்தவ வாழ்க்கையில் பாவம் நம்மை வெட்கம், பயம் போன்ற மனநிலைகளில் தள்ளும். ஆனால், இயேசு நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார். பயத்தை நீக்குகிறார். மேலும் நம்மை தைரியமாக பணி செய்ய அழைக்கிறார். சீடர்களாகுவதற்கு முன் பயம் நம்முடைய இடையூறாக இருக்கலாம். ஆனால், இயேசுவின் வார்த்தை நம்மை தெளிவாக தைரியப்படுத்தும். நாம் இதை உணரும்போது, மற்றவர்களை அவருக்கு சீடர்களாக உருவாக்க முடியும்.

2. மாற்றமடைந்தவர்களைக் கொண்டு மாற்றம் ஏற்படுத்திட
(Bring about change through those who have been transformed)
 ἀπὸ τοῦ νῦν (அபோ தூ நூன்) இதுமுதல் τοῦ νῦν (தூ நூன்) என்பது "இப்போதைய காலம் அல்லது இப்போது முதல்" என்று மொழிபெயர்க்கப்படலாம். இது ஒரு காலத்தன்மையைக் குறிப்பிடுகிறது. அதாவது "இதுவரை நடந்ததை விட்டுவிட்டு, புதிய ஒரு காலம்" என்பதைக் குறிக்கும். பேதுருவின் பழைய வாழ்க்கை முறையிலிருந்து புதிய பணி அல்லது சேவை வாழ்விற்கு மாறுதல் என்கிற மாற்றத்தின் முக்கியத்துவத்தை காட்டுகிறது. "இதுமுதல்" என்பது மாற்றத்தை குறிக்கிறது. பேதுரு ஒரு சாதாரண மீனவராக இருந்தவர். இப்போது முழுமையான மாற்றம் கொண்டவரானார். இயேசு அவருக்குள் புதிய வாழ்க்கையின் பயணத்தை தொடங்குகிறார். நம்முடைய பழைய வாழ்க்கையிலிருந்து ஒரு புதிய பாதையில் செல்ல இயேசு அழைக்கிறார். இதில் மற்றவர்களை ஆண்டவரின் சேவையில் உருவாக்குவதற்கு நம்மை தயார் செய்ய வேண்டும்.

3. அழிவின் நிலையில் இருக்கும் ஆன்மாக்கள் வாழ்வு பெற்றிட
 (The souls in a state of destruction may gain life)
இங்கு ἔσῃ (எஸே) என்பது “நீயாக இருப்பாய்” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இது அடுத்தகாலத்தில் நிகழவிருக்கும் ஒரு செயலைக் குறிக்கிறது. பேதுருவை இயேசுவின் பணி செய்ய, எதிர்காலத்தில் அவருடைய சீடராக செயல்படுவதை உறுதிப்படுத்த சொல்லப்பட்டதாகும். அடுத்து ἁνθρώπους (அந்த்ரோப்பூஸ்) என்பது “மனிதர்கள்” அல்லது "மனிதர்களின் கூட்டம்" என்று பொருள்படும். பேதுரு இதுமுதல் மனித இனத்தின் மீது தீவிரமாக பணிசெய்ய வேண்டியவர் ஆகிறார். ἔσῃ (எஸே சொய்ங்ரோன்) என்றால் “பிடிக்கிறவனாயிருப்பாய்” ζῷγρῶν (சொய்ங்ரோன்) என்பது இரண்டு சொற்களின் இணைப்பு: ζωή (சோயி) என்பது “உயிர்” அல்லது “வாழ்வுறுதல்” என்றும், ἀγρεύω (அக்ரேவோ) என்றது “பிடித்தல்” என்று பொருள்படும். சேர்ந்து, ζῷγρῶν என்பது “உயிருடனானவர்களை பிடித்தல்” அல்லது "உயிருடன் வைத்துக்கொள்ளல்" என்று பொருள்படும். இது உண்மையான பொருளில் மீன்களை இறக்காமல், பத்திரமாக பிடித்து வைத்திருப்பது என்று அர்த்தம் கொள்ளலாம். அதேபோன்று அழிவின் நிலையில் இருக்கின்ற ஆத்மாக்களை பாதாளத்தின் வாசல்கள் கொண்டு சென்றுவிடாதபடிக்கு அவர்களை பரலோகத்திற்கு நேராக ஆதாயப்படுத்துவதே சிறப்பானதாகும். ஆதலால் பேதுரு இதுமுதல் ஆன்மாக்களை நல்வாழ்வுக்குள் அழைத்து செல்வதைக் குறிக்கிறது. இது சாத்தானின் பிடியில் இருந்து ஆன்மாவை மீட்பதைக் குறிப்பதாகும். நாமும்கூட அழிந்து கொண்டிருக்கும் ஆத்துமாக்களை காப்பாற்றிட சீடர்களை உருவாக்கி தேவனுடைய ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க பிரயாசப்படுவோம் கர்த்தருடைய கிருபை நம் அனைவரோடும் கூட இருப்பதாக.

இயேசுவால் பிடிக்கப்பட்டவரே
பிறரை பிடிக்க முடியும் -
இயேசுவால் உருவாக்கப்பட்டவரே
பிறரை உருவாக்க முடியும்.

எழுதியவர்
Rev. I. தர்மதுரை
உதவிகுரு, 
பாளையங்கோட்டை சேகரம்

Post a Comment

0 Comments