Ad Code

அநீதியின் மத்தியில் இறைநீதிDivine Mishpat in the Midst of Injustice April 2026

புதிய நிதியாண்டின் துவக்கத்தில் (ஏப்ரல் 2026) அடியெடுத்து வைத்துள்ள அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள். இந்த மாதத்திற்கான சட்டவாக்கிய தொடர் தியானம்:

அநீதியின் மத்தியில் இறைநீதி
Divine Mishpat in the Midst of Injustice 

சங்கீதம் 94. 14 & 15: ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்; தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக் கைவிடார். தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்; நேரிய மனத்தினர் அதன்வழி நடப்பர். 

இந்த 94 ஆம் சங்கீதம் சமூகத்தில் நிலவும் அநீதி, ஊழல், மற்றும் தீயவர்களின் செருக்கைக் கண்டு வேதனைப்படும் ஒரு விசுவாசியின் வேண்டுதலாகும். இந்த சங்கீதத்தை எழுதியவர் யார் அல்லது எப்போது எழுதப்பட்டது என்று உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் இது ஒரு விசுவாசி அநீதிக்கு உள்ளான காலத்தில் எழுதப்பட்டது என்பது தெளிவாகிறது. அநீதியின் மத்தியில் கடவுளின் நீதியைத் தேடும் நம்பிக்கை மற்றும் ஆறுதலின் சங்கீதமாகும். 

1. தள்ளிவிடாத இறைநீதி
அநீதி இளைக்கப்பட்ட போது, மனிதர் வேண்டாம் என்று தள்ளி விடலாம். ஆனால், நம் கர்த்தர் அவரது ஜனங்களை விட்டு விலகுவதில்லை.

2. கைவிடாத இறைநீதி
கடவுள் உதவியற்ற நிலையில் தமது ஜனங்களை அவர் விட்டுவிடுவதில்லை.

3. வாழ்வளிக்கும் இறைநீதி
நீதி திரும்பும், அது நியாயத்தைக் கொண்டு வரும். அப்போது நல்ல, உண்மையான ஜனங்கள் வாழ்வார்கள்.

இந்த சங்கீதத்தில் வரும் இன்னொரு முக்கிய வசனம் (17): 'கர்த்தர் எனக்கு உதவியிராவிட்டால் நான் மரணத்தினால் மௌனமாக்கப்பட்டிருப்பேன்!"

இந்தச் சூழலில் நீங்கள் கடந்து செல்லுகிறீர்களோ? சோர்ந்து போக வேண்டாம். வாழ்க்கையின் போராட்டங்கள் மற்றும் அநீதிகளுக்கு நடுவில், நம்முடைய முயற்சிகள் தோற்றுப் போன இயலாமையிலும், இறைவன் அமைதியாகவும், சரியான நேரத்திலும் நம் ஆன்மாவை மீட்டு, நீதி செய்து, நம்மைத் தேற்றுகிறார். இறையாசி
உங்களோடிருப்பதாக...

சங்கீதம் 94 ஒரு முறை இந்த ERV. (Tamil Bible: Easy-to-Read Version) மொழிபெயர்ப்பில் வாசித்து பாருங்கள்.
1 கர்த்தாவே, நீர் ஜனங்களைத் தண்டிக்கும் தேவன்.
    நீர் வருகிறவரும் ஜனங்களுக்குத் தண்டனையைத் தருகிறவருமான தேவன்.
2 நீர் முழு பூமிக்கும் நீதிபதி.
    பெருமையுடைய ஜனங்களுக்கு, அவர்களுக்குரிய தண்டனையைக் கொடும்.
3 கர்த்தாவே, எத்தனை காலம் தீயவர்கள் கேளிக்கைகளில் திளைத்திருப்பார்கள்?

4 எதுவரைக்கும் அக்குற்றவாளிகள்
    அவர்கள் செய்த தீய காரியங்களைப்பற்றிப் பெருமை பாராட்டுவார்கள்?
5 கர்த்தாவே, அவர்கள் உமது ஜனங்களைத் தாக்குகிறார்கள்.
    உமது ஜனங்கள் துன்புறும்படி அவர்கள் செய்கிறார்கள்.
6 அத்தீயோர் விதவைகளையும் இத்தேசத்தைப் பார்க்க வருவோரையும் கொல்கிறார்கள்.
    பெற்றோரில்லாத பிள்ளைகளை அவர்கள் கொலை செய்கிறார்கள்.
7 அவர்கள் அத்தீயக் காரியங்களைச் செய்வதை கர்த்தர் பார்ப்பதில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.
    நிகழ்வதை இஸ்ரவேலின் தேவன் அறியார் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

8 தீய ஜனங்களாகிய நீங்கள் மூடர்கள்.
    நீங்கள் எப்போது உங்கள் பாடத்தைக் கற்பீர்கள்?
கொடிய ஜனங்களாகிய நீங்கள் அறிவில்லாதவர்கள்!
    நீங்கள் புரிந்துகொள்ள முயலவேண்டும்.
9 தேவன் நமது காதுகளை உண்டாக்கினார்.
    நிச்சயமாக அவருக்கும் காதுகள் உள்ளன.
அவரால் நிகழ்வதைக் கேட்கமுடியும்!
    தேவன் நமது கண்களை உண்டாக்கினார்.
நிச்சயமாக அவருக்கும் கண்கள் உள்ளன.
    அவரால் நிகழ்வதைக் காணமுடியும்!
10 தேவன் அந்த ஜனங்களை ஒழுங்குபடுத்துவார்.
    தேவன் அவர்கள் செய்ய வேண்டியவற்றை அவர்களுக்குக் கற்பிப்பார்.
11 ஜனங்கள் நினைப்பதை தேவன் அறிகிறார்.
    வெளிப்படும் சிறிய அளவு காற்றைப்போன்றவர்கள் ஜனங்கள் என்பதை தேவன் அறிகிறார்.

12 கர்த்தர் ஒழுங்குபடுத்தும் மனிதன் மகிழ்ச்சியாயிருப்பான்.
    சரியான வழியில் வாழ்வதற்கு தேவன் அவனுக்குக் கற்பிப்பார்.
13 தேவனே, குழப்பம் நேருகையில் அவன் அமைதியாயிருக்க நீர் அவனுக்கு உதவுவீர்.
    தீயோர் கல்லறைக்குள் வைக்கப்படும்வரை அவன் அமைதியாயிருக்க நீர் அவனுக்கு உதவுவீர்.
14 கர்த்தர் அவரது ஜனங்களை விட்டு விலகுவதில்லை.
    உதவியின்றி அவரது ஜனங்களை அவர் விட்டுவிடுவதில்லை.
15 நீதி திரும்பும், அது நியாயத்தைக் கொண்டு வரும்,
    அப்போது நல்ல, உண்மையான ஜனங்கள் வாழ்வார்கள்.

16 தீயோரை எதிர்ப்பதற்கு ஒருவனும் உதவவில்லை.
    தீமை செய்வோரை எதிர்க்கும்போது ஒருவனும் எனக்குத் துணைவரவில்லை.
17 கர்த்தர் எனக்கு உதவியிராவிட்டால்
    நான் மரணத்தினால் மௌனமாக்கப்பட்டிருப்பேன்!
18 நான் விழத்தயாராயிருப்பதை அறிகிறேன்,
    ஆனால் கர்த்தர் தம்மைப் பின்பற்றுபவனுக்கு உதவுகிறார்.
19 நான் கவலையடைந்து கலங்கியிருந்தேன்.
    ஆனால் கர்த்தாவே, நீர் எனக்கு ஆறுதல் கூறி எனக்கு மகிழ்ச்சியளித்தீர்.

20 தேவனே, நீர் அநீதியுள்ள நீதிபதிகளுக்கு உதவுவதில்லை.
    ஜனங்களின் வாழ்க்கை கடினமாவதற்கு அத்தீய நீதிபதிகள் சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
21 அந்நீதிபதிகள் நல்லோரைத் தாக்குகிறார்கள்.
    களங்கமற்ற ஜனங்களைக் குற்றவாளிகள் எனக் கூறி, அவர்களைக் கொல்கிறார்கள்.
22 ஆனால் உயரமான பர்வதங்களில் கர்த்தர் எனக்குப் பாதுகாப்பிடம்.
    என் கன்மலையான தேவன் என் பாதுகாப்பிடம்.
23 அத்தீய நீதிபதிகள் செய்த தீய காரியங்களுக்காக தேவன் அவர்களைத் தண்டிப்பார்.
    அவர்கள் பாவம் செய்ததால் தேவன் அவர்களை அழிப்பார்.
    எங்கள் தேவனாகிய கர்த்தர் அத்தீய நீதிபதிகளை அழிப்பார். 

Post a Comment

0 Comments