இளமை பருவம்
திண்டிவனத்தில் மருத்துவ மிஷனரியாக ஊழியம் செய்து வந்த டாக்டர். ஜான் ஸ்கட்டர் II, சோபியா ஸ்கட்டர் தம்பதியினரின் ஐந்தாவது குழந்தையாக 09-12-1870 அன்று பிறந்தவர் தான் ஐடா ஸ்கட்டர். ஐடா ஸ்கட்டருக்கு ஆறு வயது இருக்கும்பொழுது சரியாக 1877 ஆம் ஆண்டில் இந்தியாவில் கொடியபஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தின்கொடுமையை நேரில் கண்ட ஐடா தன் வாழ்நாளில் ஒருபோதும் மிஷனரி ஆகப்போவது இல்லை என தீர்மானித்திருந்தார். ஐடா தனது மேற்கல்வியையும், இறையியல் பயிற்சியையும் அமெரிக்கா நாட்டில், 20வது வயதில் முடித்தார்.
திசைகாட்டிய அனுபவங்கள்
தந்தை ஜான் ஸ்கட்டரின் மருத்துவப் பணியில் உதவி வந்த தாய் சோபியா ஸ்கட்டருக்கு உடல் நலம் குன்றிய காரணத்தால் ஐடா 1890- ல் இந்தியாவிற்கு வரவேண்டிய கட்டாயம் உருவானது. கடல் மார்க்கமாக சென்னை துறைமுகத்தை அடைந்த ஐடா வையும் அவரது சகோதரன் ஹாரியையும் அழைத்து செல்ல அவரது தந்தை டாக்டர் ஜான் ஸ்கட்டர் துறைமுகம் வந்திருந்தார். துறைமுகத்திலிருந்து மாட்டு வண்டியில் பயணம் செய்து திண்டிவனத்தில் உள்ள கூரைவேய்ந்த மிஷன் வீட்டுக்கு வந்தனர். பாமர மக்கள் இவரையும் ஒரு மருத்துவராக எண்ணினர். மருத்துவ சிகிச்சைக்காக மிஷன் விட்டுக்கு வரும் திண்டிவன மக்கள், ஐடா ஸ்கட்டரை “மிஸ்ஸியம்மா” என்று அழைத்தனர்.
1870 ஆம் வருடம் நள்ளிரவை நெருங்கும் நேரம் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தார் ஐடா, சிம்னி விளக்கின் ஒளியில் ஒரு இஸ்லாமியர் பதற்றத்துடன் காணப்பட்டார். “மிஸ்ஸியம்மா நீங்கள் தான் என் மகளைக் காப்பாற்ற வேண்டும், தலைப் பிரசவம்! வலியால் துடிக்கிறாள் ” என்று அவர் மன்றாடினார். ஐடாவோ, நான் டாக்டர் இல்லை. பிரசவம் பாக்க எனக்கு தெரியாது, இருங்கள். அப்பாவை (டாக்டர் ஜான் ஸ்கட்டர்) எழுப்புகிறேன். என்றவாறு மாடி அறைக்குச் செல்ல திரும்பினாள். அந்த மனிதனோ, “வேண்டாம் மிஸ்ஸி அவரை எழுப்பவேண்டாம்” என்று கூறி தடுத்தார்.! ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு ஆண் பிரசவம் பார்க்க எங்களின் வேதத்தில் இடம் இல்லை. அதைவிட அவள் செத்தாலும் பரவாயில்லை. நான் வருகிறேன் தாயே!” கைகள் கூப்பி விடை பெற்று இருளில் மறைந்துபோனார்.
அதிக நேரம் ஆகவில்லை, மீண்டும் கதவு தட்டப்பட்டது. அவர் ஒரு இந்து, வணக்கம் கூறிவிட்டு, “மிஸ்ஸியம்மா என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள், உடனே என்னோடு வாருங்கள் அம்மா அந்த இரு உயிரையும் காப்பாற்றுங்கள் தாயே!” அவரும் கெஞ்சினார், மீண்டும் அதே பதிலைத்தான் ஐடா கூறினார். ஐடா தந்தையை அழைக்கவா என்று கேட்டாள். ஆனால் அந்த மனிதனோ, “வேண்டாம் தாயே! எங்கள் சாஸ்த்திரத்தில் அதற்கு இடமில்லை. என் மனைவி செத்தாலும் சாகலாமே தவிர ஒரு ஆண் அவளுக்கு பிரசவம் பார்க்க முடியாது தாயே” அவரும் ஏமாற்றத்துடன் திரும்பினார். மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்து பார்த்தபோது வேறொரு நபர்! அவரும் ஒரு இந்துதான்.
மறுநாள் மாலையில் வீதியில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று சவ ஊர்வலங்கள் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார் . அந்த மூவரும் பிரசவ சிக்கலில் இரவில் இறந்துபோன பெண்மணிகள் என்பதைத் தெரிந்து கொண்டபின் மனம் வெதும்பினார். இந்தியப் பெண்மணிகளுக்கு உடனடி தேவை பெண் மருத்துவர்கள் என்பதை ஐடா அன்றே உணர்ந்து கொண்டார்.
மருத்துவ சேவைகள் & சாதனைகள்
1899 ஆம் வருடம் நியூயார்க் நகரில் கார்நெல் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் (Cornell University Medical College) பெண்கள் மருத்துவம் பயில அனுமதிக்கப்பட்ட முதல் வகுப்பில் சேர்ந்தார். தேர்ச்சியுற்று மருத்துவரான உடனே தமிழ்நாடு திரும்பி மருத்துவப் பணியை, குறிப்பாக பெண்களுக்கு செய்யவேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். அவரது ஆர்வம் கண்டு, மான்ஹாட்டான் நகரைச் சேர்ந்த வங்கியாளர் ஷெள் (Schell) என்பவர் தமிழ்நாட்டு பெண்களின் நலனுக்காக 10,000 அமெரிக்க டாலர்களை அவரின் மனைவியின் நினைவாக ஐடாவிடம் வழங்கினார்.
ஐடா தமிழ்நாடு திரும்பியபோது அவரின் தந்தை வேலூரில் மருத்துவப் பணியில் ஈடு பட்டிருந்தார். 1900 ஆம் ஆண்டில் அவரின் தந்தை ஜான் ஸ்கட்டர் மரணமடையும்வரை அவருடன் இணைந்து மருத்துவப் பணியை திறம்பட செய்து வந்தார். தந்தையின் மரணத்திற்கு பின் மருத்துவப் பணியின் முழுப் பொறுப்பையும் ஐடா ஏற்றுக்கொண்டார்.
அமெரிக்காவிலிருந்து கொண்டு வந்திருந்த நன்கொடையைப் பயன்படுத்தி 1902 ஆம் வருடம் ஒரு சிறு மருத்துவமனையை வேலூரில் அமைத்து அதற்கு ஷெல் மருத்துவமனை (Schell Hospital) என்று பெயரிட்டார். சிகிச்சையும் மருந்துகளும் இலவசமாக தரப்பட்டன. (தற்போது இது Mary Tabler Schell Eye Hospital என்று கண் மருத்துவமனையாக பெரிய அளவில் இயங்கி வருகின்றது).
சென்னைப் பல்கலைக்கழக அனுமதியுடன் இந்தியாவிலேயே முதல் தாதியர் பயிற்சிப் பள்ளியை நிறுவினார். இன்றுவரை பெண் கல்விக்காக விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டிய சூழ்நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கும் நிலையில், அரசு அனுமதியுடன் சென்னைப் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் 1918 ஆம் வருடத்திலேயே பெண் மருத்துவர்களை உருவாக்க மருத்துவக் கல்லூரி நிறுவி பெண்கல்வியில் புரட்சி செய்தார். இதுவே கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் ஆரம்பம். 1945 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் ஆண்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
1952 ஆம் வருடம் உலகின் சிறந்த 5 டாக்டர்களில் ஒருவராக டாக்டர் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தில் பரவலாக காணப்பட்ட ப்ளேக் (plague), காலரா, தொழுநோய் ஆகியவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றப் போராடினார். அவரை பாசத்துடன் ஐடா அத்தை (Aunt Ida) என்றே அழைத்தனர். கடைசிவரை திருமணமே செய்துகொள்ளாமல் மக்கள் நலனுக்காகவே பணியாற்றிவந்த ஐடா அத்தை, தனது 90வது வயதில், 1960 ஆம் வருடம் மே மாதம் 24 ஆம் நாள் அதிகாலையில் இறைவனடி சேர்ந்தார். ஆனால் அவரது சாதனைகள் மூலம் இன்னும் கடவுளுடைய நாமம் மகிமைப்படுகின்றது.
0 Comments