தவறாகப் பேசப்படும் வேதாகம நட்புகள்
இன்றைய நவீன உலகப் பார்வை மற்றும் மேலோட்டமான புரிதல்களால் தாவீது - யோனத்தான் & இயேசு - யோவான் ஆகியோரின் தூய நட்புகள் தவறாகச் சித்தரிக்கப்பட்டு, வேறு கோணத்தில் விவாதிக்கப்படுகின்றன.
1. தாவீது - யோனத்தான்:
1 சாமுவேல் 18:1: "யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே பிணைக்கப்பட்டிருந்தது; யோனத்தான் அவனைத் தன் ஆத்துமாவைப்போல நேசித்தான்"
2 சாமுவேல் 1:26: "உன் சிநேகம் எனக்கு மிக அதிசயமாயிருந்தது; ஸ்திரீகளின் சிநேகத்தைப் பார்க்கிலும் உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது"
உலகப் பார்வை:
ஆத்துமா பிணைக்கப்படுதல் மற்றும் "பெண்களின் அன்பை விட பெரியது" என்ற வார்த்தைகளை வைத்து ஓரினச்சோர்க்கை உறவோ என தவறாக சிலர் ஊகிக்கிறார்கள்.
வேத விளக்கம்:
• விவிலியத்தில் "ஆத்துமா பிணைக்கப்படுதல்" என்பது கடவுளுக்கு பயந்த இரண்டு பக்தியுள்ள மனிதர்களுக்கு இடையிலான ஆவிக்குரிய உடன்படிக்கையைக் குறிக்கிறது.
• பெண்களின் அன்பை விட பெரியது" என்ற சொல்லாடல்: இதன்பொருள் பாலியல் உறவு அல்ல; சுயநலமற்ற தியாக அன்பு. அந்த காலத்தில் அரச குடும்பங்களில் திருமணங்கள் பெரும்பாலும் அரசியல் காரணங்களுக்காக நடந்தன. ஆனால், யோனத்தானின் அன்போ எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, அரச உரிமை & உயிரைக் கொடுக்கும் தூய நட்பாக இருந்தது.
• தாவீதும் யோனத்தானும் இறை கற்பனைகளைக் கைக்கொண்டவர்கள். வேதாகமம் பாலியல் ஒழுக்கக்கேட்டைத் தீவிரமாகக் கண்டிக்கும் சூழலில், இவர்கள் கடவுளுக்கு முன்பாக உத்தமர்களாகவே வாழ்ந்தனர்.
2. இயேசு - யோவான்:
யோவான் 19:26: இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன்
யோவான் 13:23: மார்பில் சாய்ந்திருந்த...
உலகப் பார்வை
"இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன்" மற்றும் மார்பில் சாய்ந்திருந்த நிலையை வைத்து தவறான பிரத்யேக உறவாகச் சித்தரிக்கிறார்கள்.
வேத விளக்கம்:
• அக்கால யூத வழக்கப்படி, ஒருவரின் தலை பக்கத்தில் இருப்பவரின் நெஞ்சிற்கு அருகில் இருப்பது முற்றிலும் இயல்பான உணவருந்தும் முறை (Recumbent style).
• இயேசு சிலுவையில் தொங்கும்போது, தன் தாயாகிய மரியாளைப் பராமரிக்கும் பொறுப்பை யோவானிடமே ஒப்படைத்தது அவர்கள் இடையே இருந்த தூய்மையான நம்பிக்கையையும் குடும்பப் பிணைப்பையும் காட்டுகிறதே தவிர வேறில்லை.
நிறைவாக...
உலகப் பார்வை என்பது பெரும்பாலும் மனிதனின் சுயநலம், பாலியல் சிந்தனை மற்றும் நவீனக் கண்ணோட்டங்களின் வழியே எல்லாவற்றையும் அளவிட முயல்கிறது. இந்த கண்ணோட்டத்தில் இரண்டு நண்பர்கள் தோள் மீது கை போட்டு நடந்தால் கூட தவறாக பேசும் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் தான் சுயநலமற்ற, தியாகம் நிறைந்த தூய நட்பைக் கூட உலகத்தால் புரிந்துகொள்ள முடிவதில்லை.
ஆனால், வேத விளக்கம் நமக்குத் தெளிவுபடுத்துவது என்னவென்றால்: இந்த தூய பிணைப்புகளை உலகியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பது விவிலியத்தின் உண்மையான அர்த்தத்தைச் சிதைப்பதாகும். தாவீது - யோனத்தான் உறவு என்பது சுயநலமற்ற உடன்படிக்கை நட்புக்கும் தியாகத்திற்கும் முன்மாதிரி; இயேசு - யோவான் உறவு என்பது தெய்வீக அன்புக்கும் சீஷத்துவத்தின் நெருக்கத்திற்கும் முன்மாதிரி.

0 Comments